Monday, January 11, 2010

அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில்( பனையபுரம்)


மூலவர் : பனங்காட்டீஸ்வரர்

அம்மன்/தாயார் : சத்யாம்பிகை, புறவம்மை

தல விருட்சம் : பனை

தீர்த்தம் : பத்ம தீர்த்தம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : புறவார்பனங் காட்டூர்

ஊர் : பனையபுரம்

மாவட்டம் : விழுப்புரம்

மாநிலம் : தமிழ்நாடு



பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரபதிகம்

விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழவெங்கணை யால்எய்தாய்விரி பண்ணமர்ந்தொலி சேர் புறவார் பனங்காட்டூர்ப் பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞா பிறை சேர்நுதலிடைக் கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே.

-திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 20வது தலம்.


திருவிழா:

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

இங்கு மூலவர் பனங்காட்டீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம் அஞ்சல் - 605 603 (வழி) முண்டியம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம்.

போன்: +91-99420 56781

பொது தகவல்:


இத்தலத்தில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் குலோத்துங்க சோழன், கோனேரின்மை கொண்டான், பரகேசரி ஆதிராஜேந்திர தேவன் முதலிய அரசர்கள் கல்வெட்டுக்கள் உள்ளன.

கல்வெட்டுக்களில் இக்கோவில் திருப்புறவார்பனங்காடுடையார் கோவில் எனவும், இறைவன் பெயர் திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.



பிரார்த்தனை

திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைநிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும், கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:


சூரியன் வழிபட்ட தலம்.

வெளிப்பிரகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனைமரங்கள் மூன்று உள்ளன. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நின்ற திருக்கோலம்.

துவாரபாலகியர்சுதையில் உள்ளனர். துவாரகணபதியையும், தண்டபாணியையும் தொழுது உட்சென்று சத்யாம்பிகையைத் தரிசிக்கலாம். நவக்கிரகம் தொழுது, வலம் முடித்து, கொடிக் கம்பம் வணங்கி, வாயில் நுழைந்தால் சுவாமி சந்நிதியை அடையலாம்.

உள்பிரகாரங்களில் விநாயகர் , ஆறுமுகர், சனிபகவான், நவக்கிரகம், சூரியன், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், இடபாரூடர், திருமால், கஜலஷ்மி, நால்வர், பிக்ஷõடனர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, இலிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சன்னிதிகள் உள்ளன. இவற்றுள் திருநீலகண்டர் தம்மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு மிகவும் அரிதான காட்சியாகும் .

பனையைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் ஐந்தனுள் இதுவும் ஒன்று. பிறதலங்களினின்றும் வேறுபாடறிவதற்காக- காடுகளால் சூழ்ந்த பகுதியாக இத்தலம் விளங்கியமையின் (புறவு: சோலை, காடு) "புறவார் பனங்காட்டூர்' என்றழைக்கப்பட்டது.

முல்லை நிலக் காடுகளால் சூழப் பெற்று இத்தலம் விளங்கியதால் புறவார் பனங்காட்டூர் என வழங்கப்படுகிறது.

சிபிச்சக்ரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காத்தற்காகத் தன் கண்களைப் பறித்தளிக்க, இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சிதந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கண்பறித்து அருளிய கடவுள் என பெயர் ஏற்பட்டது.



தல வரலாறு:


சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செயத் வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர்.

அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான்.

தான் செய்த தவறுக்கு வருந்தி சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றார். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார்பனங்காட்டூரும் ஒன்றாகும்.



சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் பனங்காட்டீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

No comments:

Post a Comment