Friday, January 29, 2010

புராதன முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் சங்க காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் முருகன் கோயில் ஒன்றின் இடிபாடுகளை இந்திய அகழ்வாரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



மகாபலிபுரத்துக்கு வடக்கே சாலாவான் குப்பம் என்னும் இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த ஆய்வாளர்கள் அங்கு சுனாமி தாக்குதலுக்கு பின்னர் மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து காணப்பட்ட ஒரு கல்வெட்டை கண்டுள்ளனர்.



அதில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுத்து வந்து, ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் அங்கிருந்த ஒரு கோயிலுக்கு மானியங்கள் வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது.

அதனை அடுத்து அங்கு ஆய்வு நடத்திய போது, அந்தப் பகுதிக்கு அருகிலே மண்ணில் புதைந்த நிலையில் ஒரு முருகன் ஆலயத்தைக் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.



ஆனால் ஆய்வுகளை அவர்கள் தொடர்ந்த போது, அந்த கோயிலின் அடியில் மேலும் மண்ணில் புதைந்த நிலையில் மற்றொமொரு கோயிலும் காணப்பட்டுள்ளது.

அதாவது முதலில் பல்லவர்களால் சங்க காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயில், சுனாமி அலைகளால் சேதமடையவே, அதன் மீது மீண்டும் மற்றுமொரு கோயில் பின்னர் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று கூறுகிறார் சென்னை அகழ்வாராய்ச்சித் துறையைச் சேர்ந்த டி. சத்யமூர்த்தி அவர்கள்.



பின்னர் இரண்டாவது கோயிலும்(மேலே இருந்த கோயில்) சுனாமியால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கோயில் கி.மு 2வது நூற்றாண்டுக்கும் கி.பி முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்வதாகவும் சத்யமூர்த்தி கூறினார்.

2 comments: