Friday, April 29, 2011

உனது சிறந்த நண்பன் - அன்னை


யாருக்காவது தொற்றுநோய் இருந்தால் நாம் அவனுடன் நெருங்கிப் பழகமாட்டோம், கவனமாக அவனிடமிருந்து விலகிவிடுவோம். பொதுவாக அவனிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவிவிடாமலிக்க அவனை ஒரு தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

எவன் உன்னுடைய தவறான அல்லது அசிங்கிமான செயல்களில் பங்கு கொள்ள மறுக்கிறானோ, தவறான செயல்களைச் செய்யத் தூண்டுதல் ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்க எவன் உன்னை ஊக்குவிக்கிறானோ அவனே உன் நண்பன். அவனையே உன்னுடைய சிறந்த நண்பனாக நீ கருதவேண்டும். அப்படிப்பட்டவனுடன்தான் நீ பழகவேண்டும், எவனுடன் வேடிக்கைகளில் ஈடுபடலாமோ, எவன் உன்னுடைய தீய குணங்களைப் பலப்படுத்துகின்றானே அவனுடன் அன்று. அவ்வளவுதான்.

இதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நான் யாரை மனத்தில் கொண்டு இதைச் சொல்கிறேனோ அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இறுதியாக, நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதை‌யில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே.

அவனே உண்மையான நண்பன், வாழ்விலும் தாழ்விலும் நீங்காத நண்பன், உன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய, குணமாக்கக்கூடிய நண்பன், வேண்டும்போது எப்பொழுதும் ஓடிவரும் நண்பன். நீ மனப்பூர்வமாக அழைத்தால் உனக்கு வழிகாட்டவும், உன்னைத் தாங்கவும் அவன் எப்பொழுதும் இருப்பான் - அதோடு உண்மையான முறையில் உன்னை நேசிப்பான். 

by
Webdunia.com (tamil)

Thursday, April 28, 2011

தியானத்தின் இல‌க்கு எவ்வடிவில் உருப்பெற வேண்டும் - ரமணர்


ரமணர்: தன் முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற தூய உணர்வே நமது உண்மையான இயல்பு. அந்த நிலைமை நாம் உணர்ந்து அவ்வனுபவத்தில் ஒன்றிவிடுவோமானால் அது சரியே. ஆயினும், ஒருவர் அந்நிலையை முயற்சி ஏதுமின்றி அடைவதற்கில்லை. அத்தகைய முயற்சியை முனைந்து மேற்கொள்வதே தியானம் எனப்படுவது.

ஜென்மாந்திர வாசனைகள் அனைத்தும் மனதை வெளிமுகமாய்ப் புறப் பொருள்கள் மீதே திருப்புகின்றன. அவ்வாறான எண்ணங்கள் யாவற்றையும் துறந்து, மனதை உள்முகமாகத் திருப்ப வேண்டும். இந்த அகமுக நாட்டத்திற்கு அநேகமாக எல்லோருக்குமே சுய முயற்சி தேவைப்படுகிறது. 'சிந்தையை அடக்கிச் சும்மா இரு' என்பதே சாதகர்களுக்கு எந்த ஒரு ஞானியின், எந்த ஒரு ஆன்மீக நூலின் போதனையாக அமைகிறது.

ஆனால் 'சும்மா இருத்தல்' அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆகவேதான் அதற்கு முயற்சி அவசியப்படுகிறது. இந்த உச்ச ஆன்ம நிலையாம் மோன சாந்தியை முயற்சி ஏதுமின்றி எய்துவிட்ட யாரேனும் ஒருவரை நாம் காண முடிந்தாலும், அவர் போன ஜென்மத்தில் (முற்பிறவியில்) அதற்கான முயற்சி மேற்கொண்டதன் பயனே அது என்று நீங்கள் அனுமானிக்கலாம்.

முயற்சியற்ற, விருப்பத்தேர்வற்ற, பேரின்ப நிலையாம் தூய உணர்வைத் துய்க்க விடாமுயற்சி அவசியம். அந்த விடாமுயற்சியே 'தியானம்' ஆகும். அதற்கான தியானம் உங்களுக்குப் பிடித்தமான முறையில் அமையலாம். எவ்வகையான தியானம் எண்ண அலைகளையெல்லாம் ஓயச்செய்ய உடனடியாய் உதவுகிறது என்று பார்த்துத் தேர்ந்தெடுத்து அதனையே உமது தியான மார்க்கமாகக் கடைபிடிக்கலாம்.

'சிந்தையை அடக்கி சும்மாவிருக்கும்' திறமே ஜீவன்முக்தி. ஆயினும் இந்த உண்மையை எவ்வளவுதான் நீர் உமது மனத்திற்கு எடுத்துரைத்தாலும் சிந்தை சும்மா இருப்பதில்லை. ஏனெனில் மனம்தானே மனத்திற்கு அவ்வாறு கூறுகிறது! அந்த மனத்திற்கு அவ்வாறு அடங்கிவிடும் திறமோ அரிதினும் அரிது. மன நாசத்தையே சாத்திரங்கள் அனைத்தும் இயம்பியுள்ன. இதனையே சான்றோர்கள் திரும்பத் திரும்பத் கூறுவதை நாள்தோறும் கேட்கிறோம்.

நாம் குருவாக வரித்திருப்பவரும் இதையே கூறினாலும் மனத்தை அடக்கி நாம் சும்மா இருப்பதில்லை. மாயா உலகத்திலும், புலன்கள் உணர்த்தும் புறப் பொருட்கள் மீதும் மனத்தை மேய விட்டுவிடுகிறோம். இதன் காரணமாகவே முயற்சிகளற்ற பூரண சாந்தி நிலை எய்துவதற்கு நெஞ்சறிய, ஆன்மார்த்த அபார முயற்சி அவசியமாகிறது.

முயற்சி செய்யலாமல் உங்களால் வெறுமனே இருப்பது சாத்தியமே அல்ல. அவ்வாறு முயன்று மேன்மேலும் உள்ளாழ்ந்து ஆன்ம நிலைபேறு எய்தபின் முயற்சி ஏதும் செய்வதும் சாத்தியமே அல்ல. 
by
Webdunia.com (tamil)

நான் யார்? - ரமண மகரிஷி


 
ரமண‌ர்: உண்மையில், 'நான் யார்?' என்னும் விசாரணையின் பொருள் 'அகந்தையாகிற நான் எனும் எண்ணத்தின் தோற்றுவாய் எது?' என்பதை அறிவதற்கான முயற்சியே ஆகும். 'நான் இந்த உடல் அல்ல' போன்ற பிற எண்ணங்களுக்கு மனத்தில் இடமளிக்கக் கூடாது. 'நான்' என்பதன் மூலத்தை நாடுவது, மற்ற எண்ணங்கள் யாவற்றையும் களைந்தெறிவதற்கான வழிமுறைக்கு சாதகமாக அமைகிறது. வேறெந்த எண்ணங்களுக்கும் நீங்கள் வாய்ப்பளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மாறாக, நான் எனும் எண்ணத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் ஒரே நோக்கத்தில் மனதைக் குவித்து நிலைநிறுத்த வேண்டும். எவ்வாறென்றால், வேறு எந்த எண்ணம் தலை தூக்கினாலும் 'அவ்வெண்ணம் யாருக்கு எழுகிறது?' என்று கேட்டுக்கொள்ள வேண்டும். 'வேறு யாருக்கு? எனக்கேதான்!' என்று அதற்கு விடை கிடைத்தால் நீங்கள் அடிப்படையான விசாரத்தைத் தொடர வேண்டும். அதாவது, "இந்த 'எனக்கு' எனும் 'நான்' யார்?, அதன் பிறப்பிடம் எது? என்ற விசாரத்தைத் விடாப்பிடியாய்ப் பற்ற வேண்டும்.

'நான்' யாரென்று எப்படித் தேடித் தெரிந்துகொள்வது?

ரமணர்: நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். முதன் முதலாக, இந்த உடலும் அதன் இயக்கங்களும் (அன்னமயகோசம்) நாமல்ல என்று அறிகிறோம். இன்னும் ஆழ்ந்து விசாரிக்கும் போது மனமும் அதன் விருத்தி பேதங்களும் (மனோமயகோசம்) நாமல்ல என்று உணர்கிறோம். அடுத்தபடி எண்ண விருத்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்று கவனிக்க வேண்டும். விருத்திகள் தாமாகவே கிளம்பிக் கொண்டிருக்கின்றன - ஒன்று, மேலோட்டமான சாதாரண நினைவுகளாகவே, அல்லது ஆலோசிப்பவைகளாகவே எழுகின்றன. அவை புத்தியிலேயே இயங்குகின்றன. அவற்றை புத்திப்பூர்வமாக உணர்வது யார்?

எண்ணங்களின் இருப்பும், அவற்றின் தெளிவான விவரங்களும் இயக்கமும், 'நான்' எனும் தனி ஜீவனுக்கே தெரிகின்றன. இவ்வாறு எண்ணங்களின் இருப்பையும் தொடர்பையும் உணர்வது எதுவோ அதுவே ஜீவவியக்தி அல்லது 'நான்' எனும் அகங்காரம் (அகந்தை), புத்தி (விஞ்ஞானமய கோசம்) என்பது அகந்தையின் உபாதியே (செருகுவதற்குரிய கவச உறை மட்டுமே) அன்றி அதுவே அகந்தை ஆகாது. இந்த அகந்தை, அதாவது 'நான்', என்பது என்ன? அது எங்கிருந்து கிளம்புகிறது? கனவிலும் நனவிலும் அதே 'நான்' உடன் தொடர்கிறது. கனவைப் பற்றி நனவில் இப்போது விசாரிக்க வேண்டியது ஒன்றும் இல்லை.

விழிப்பு நிலையில் இப்போதுள்ள 'நான்' யார்? 'நான்' தூக்கத்திலிருந்து வெளிப்பட்டவன் எனின், தூங்கும் போது அறியாமை இருளில் 'நான்' அழுந்திக் கிடந்தேன் என்று விழித்தபின் தெரிகிறது. வேத சாஸ்திரங்களும் ஞானியரும் ஐயமறக் கூறும் ஆன்ம சொரூபம் அந்த அழுந்திடக் கிடந்த அகந்தையாகிய 'நான்' ஆக இருக்க முடியாது. தூக்கத்தைக் கடந்து இருப்பதும், தூக்கத்தின்போது கனவிலும், பின்னர் நனவிலும் அந்த நிலைகளின் குணங்கள் அறவே இல்லாமல் இருந்து வருவது எதுவோ அதுவே யதார்த்தமான நான்.

அவஸ்தாதிரயத்தின் (துயில், கனவு, நனவு ஆகிய மூன்று நிலைகளின்) சாட்சியாய் (சான்றாய், நேர்காட்சியாளனாய்), அதிஷ்டானமாய் (உறைவிடமாய்), குணங்குறியற்று இருப்பது எதுவோ அதுவே 'நான்' எனும் ஆன்ம சொரூபம், என்று இவ்வாறு அகமுக விசாரணையால் அனுபவத்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பஞ்ச கோசங்களையும் கடந்து நிற்பது ஆத்ம சொரூபம். ஆநாத்ம (ஆன்மா இல்லாத) தத்துவங்களை 'நானல்ல, நானல்ல' என்று ஒதுக்கித் தள்ளிய பிறகு அங்கே விளங்குவது தய சத்-சித்-ஆனந்த சொரூபமாம் ஆத்மாவே.

பஞ்ச கோசங்களாவன: அன்னமயம் (உடல்), பிராணமயம் (ஐம்பொறிகளும் பிராணனும்), மனோமயம் (ஐம்புலன்களும் மனமும்), விஞ்ஞானமயம் (ஞானேந்திரியமும் புத்தியும்) மற்றும் ஆனந்தமயம் (மாண்டூக்ய உபநிஷத்தில் கூறப்படும் ஆழ்ந்த உறக்க நிலை). 


by
Webdunia.com (tamil)