Friday, October 29, 2010

சிவ மூலமந்திர இயல்



சைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது?

திருவைந்தெழுத்து

திருவைந்தெழுத்தாவது யாது?

நம:சிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம் வேதத்தின் நடுவனதாகவும், நால்வர் பெருமக்களால் துதிக்கப்பட்டதாகவும் எல்லோரும் எப்போதும் எண்ணத்தக்கதாகவும் உய்தி தருவதாகவும் உள்ள திருவைந்தெழுத்து மந்திரம் ஆகும். இது தூல பஞ்சாக்கரம் எனப்பட>ும். சூக்குமம், காரணம் என்று சிறப்புப் பஞ்சாக்கரங்கள் உண்டு. குருநாதர் மூலம் திருவைந்தெழுத்து உள்ளிருத்தப் பெற்றவர்கள் அந்த திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சாலச் சிறந்தது.

திருவைந்தெழுத்தைக் எண்ணத் தகுதி உடையவர் யாவர்?

எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோரும் மனதில் அன்புடன் திருவைந்தெழுத்தை எண்ணி இருக்க வேண்டும். குறிப்பு: கீழ் வரும் விடைகள் மந்திர ஜபம் செய்யும் முறையைச் சொல்லுகின்றன. மற்றபடி எங்கும் எப்போதும் எல்லோரும் திருவைந்தெழுத்தை எண்ணி இருத்தலே சிறப்பு. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் - சம்பந்தர்.

திருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாகக் கணிக்க வேண்டும்?

நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.

எப்படி இருந்து கணிக்க வேண்டும்?

முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு கணிக்க வேண்டும்.

திருவைந்தெழுததைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்?

மனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.

நிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்?

உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.

மந்திர உபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?

குருவை வழிபட்டு அவருக்கு வருடந்தோறும் இயன்ற தட்சணை கொடுத்து கொண்டே செபித்தல் வேண்டும்.

திருவைந்தெழுத்தை முறையாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டு உருவாயினும், ஐம்பது உருவாயினும், இருபத்தைந்து உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

கணித்தற்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?

செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். ( விரலிறை - கட்டைவிரல் ).

செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?

உருத்திராக்க மணி கொண்டு செய்வது உத்தமம்.

செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?

இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியும் கொள்ளத் தக்கதாகும். இல்வாழ்வான் நூற்றெட்டு மணி, ஐம்பத்து நான்கு மணிகளாலும் செபமாலை செய்து கொள்ளலாம்.

செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?

இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டு முக மணியும், பதின்மூன்று முக மணியும் செபமாலைக்கு ஆகாவாம். அன்றியும் எல்லா மணியும் ஒரே விதமாகிய முகங்களை உடையனவாகவே கொள்ளல் வேண்டும். பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை குற்றமுடையது.

செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?

வெண்பட்டிலேனும், பருத்தியிலேனும் இருபத்து ஏழிழையினால் ஆக்கிய கயிற்றினாலேனும் கோத்தல் வேண்டும்.

செபமாலையை எப்படி செய்தல் வேண்டும்?

முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோத்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு மணி என்று பெயர்.

செபமாவது யாது?

தியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.

மந்திரம் என்பதற்கு பொருள் யாது?

நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். ஆயினும் வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு திறப்படும் என்றபடியாயிற்று. ( மந் - நினைப்பவன்; திர - காப்பது ).

மானசமாவது யாது?

நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தலாம்.

உபாஞ்சுவாவது யாது?

தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்று பெயர்.

வாசகமாவது யாது?

அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம். வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.

எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும், மரப்பலகை, துணி, இரத்தினக் கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்றதொன்றிலே முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையினுள்ளே வலப்புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல் வேண்டும்.

எப்படி இருந்து செபித்தல் ஆகாது?

சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டிக் கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றை பார்த்துக் கொண்டும் செபிக்கலாகாது. செபம் செய்யும்போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் ஆகியவை ஆகாவாம்.

செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?

பிறர் கண்ணுக்கு புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகச் செபிக்கில் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனதிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயகமணி அடுத்த, முகம் மேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும், முத்தியின் பொருட்டு மேல் நோக்கித் தள்ளியும் செபித்து, பின்பு நாயகமணி கைபபட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும்போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படலாகாது.

திருவைந்தெழுத்து செபத்தால் பயன் என்ன?

திருவைந்தெழுத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின் விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தல் போல் ஆன்மாவிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி எப்போதும் இன்புற்றிருக்கும் ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவார். 

 
by



திரு அண்ணாமலை ஜோதிடம்,

அருள்மிகுஸ்ரீபாலீஸ்வரன்திருக்கோயில்

S.சங்கர் குருக்கள் 

சஹஜ நிலைக் குண்டலினி யோகம்


மூலாதாரம் சஹஸ்ராரத்துக்கு ஏறுதல் – பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்குண்ட வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெறல்

சுவாதிஷ்டானம் ஆக்கினைக்கு ஏறுதல் – ஆண்-பெண் காமப் புணர்விலிருந்து விடுபட்டு கடவுட் காதலன்-ஆன்மக் காதலி காதல் உணர்வில் கணப்பொழுதும் நீங்கா சிவ-சக்தி தெய்வீகப் புணர்வில் நிலைபெறல்

மணிபூரகம் விசுத்திக்கு ஏறுதல் – ஆணவ ஆர்ப்பாட்ட வன்பின் இயக்கத்திலிருந்து விடுபட்டு தெய்வீக ஆணைக்குக் கட்டுப்பட்ட அன்பின் ஆற்றலாய் நிலைபெறல்

சூர்ய சக்ரம் அமிர்த கலசத்துக்கு ஏறுதல் – மருள் மயக்க இருமையிலிருந்து விடுபட்டு ஆன்ம நேய ஒருமையில் நிலைபெறல்

இந்த ஏற்றம் அனாகதமாம் இருதய மையத்தினூடே எட்டு வடிவச் சிவ-சக்தியோட்டமாகத்(Figure Eight Flow) துவங்கி, கீழ்ச் சக்கரங்கள்(உஷ்ணம்) சுத்திகரிக்கப்பட்டு, மேல் சக்கரங்களின்(குளிர்ச்சி) இறக்கத்தில்(இதுவே கடவுளின் இரக்கமோ) முடிகிறது.

உமது மெய்க் குண்டத்தில் நிகழும் வேள்வியில், கீழ்ச் சக்கரங்களை, மேல் சக்கரங்களுக்கு ஆகுதியிட்டு அர்ப்பணிப்பதாக பாவித்து, அனாகதமாகிய இருதய மையத்தில் அமர்ந்து நீவிர் செய்யும் சஹஜ நிலைக் குண்டலினி யோகத்தில், நிராதார மேனிலை மேல் சக்கரங்களில் நிலை கொண்டு, இருதயத்தினூடே கீழ்ச் சக்கரங்களைச் சுத்திகரித்து, அவற்றை அருட்பேராற்றலின் இயக்கக் களமாக்கி, இவ்வாறாக ஆறாதாரம் வந்தடையும்.
சஹஜ நிலைக் குண்டலி யோகம் நேரங் கிடைக்கும் போதெல்லாம் நீவிர் செய்யலாம், இதுவே உம் சஹஜ நிலை என்று முழுதாயுணரும வரை,  இந்த எட்டு வடிவச் சக்தியோட்டத்தை தினமும் பல முறை நினைவு கூருங்கள், எட்டில் ஏற்றம் சக்தி, இறக்கம் சிவம், சக்தி வெம்மை, சிவம் குளிர்ச்சி, இரண்டின் சங்கமம் தண்மை

சத்தி அருள்தரச் சத்தன ருளுண்டாம்
சத்தன் அருள்தரச் சத்திய ருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்க
சத்தியம் எண்சித்தி தண்மை யுமாமே 

குருநாதர் திருமூலர் ஏற்கனவே உபதேசித்ததே இது.
மூலாதாரம் சஹஸ்ராரம் ஏற
சஹஸ்ராரம் மூலாதாரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

சுவாதிட்டானம் ஆக்கினை ஏற
ஆக்கினை சுவாதிட்டானம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

மணிபூரகம் விசுத்தி ஏற
விசுத்தி மணிபூரகம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

சூர்ய சக்ரம் அமிர்த கலசம் ஏற
அமிர்த கலசம் சூர்ய சக்ரம் இறங்க
அனாகத இருதய மையத்தினூடே
எட்டு வடிவச் சிவ-சக்தி யோட்டம் வாசி

அனாகத இருதய மையமே
மூலாதார சஹஸ்ரார ஒருமை
சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
மணிபூரக விசுத்தி ஒருமை
சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை

மூலாதார சஹஸ்ரார ஒருமை
பிறப்பு இறப்புச் சுழலறுக்கும்
பேரின்பப் பெருவாழ்வு

சுவாதிட்டான ஆக்கினை ஒருமை
ஆண் பெண் காமத்தினவறுக்கும்
சிவ சக்தி காதற்புணர்வு

மணிபூரக விசுத்தி ஒருமை
ஆணவ ஆர்ப்பாட்ட வன்பறுக்கும்
சச்சிதானந்த அருட்பேராற்றல்

சூர்ய சக்ர அமிர்த கலச ஒருமை
மருண் மயக்க இருமையறுக்கும்
ஆன்ம நேய ஒருமை

அனாகத இருதய மையத்தில் அமர்ந்தே
செய்வாய் சஹஜநிலைக் குண்டலி யோகம்
எட்டு வடிவச் சிவசக்தியாய் ஓடும்
சிவாமய வாசியை நீபக்தியாய் நாடி

கீழ்மேல் இடவலம் முன்பின் இருமையெலாம்
மாய்ந்தே போகும் ஒளிக்கோளப் பேருணர்வை
நினக்க ளிக்கும் குண்டலி யோகத்தின்
கணக்கு சொன்னேன் சஹஜநிலை இதுவாமே!

by

நான் வழங்கும் மகாயோகம்

 

அஷ்ட புஷ்பங்கள்



புஷ்பங்கள் பற்றி ஆகமங்களும் புஷ்பவிதி என்ற நூலும் விவரமாகச் சொல்லியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இன்ன இன்ன புஷ்பங்களை சுவாமிக்குச் சார்த்த வேண்டிய காலம் பற்றியும் கூட சொல்லியிருப்பதைக் காணலாம். தோஷமில்லாத , அதாவது பூச்சி அரிக்காத, எச்சம் இடப்படாத விடியற்காலத்தில் பறிக்கப்பட்ட புஷ்பங்களால் பூஜை செய்வது விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதைத்தான் "நன் மாமலர்" என்று ஞானசம்பந்தர் பாடுகிறார்.

இனி, அஷ்ட புஷ்பங்கள் எவை என்று பார்ப்போம்.புன்னை,சண்பகம்,பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம்,அரளி, நீலோத்பலம், தாமரை என்பனவே அஷ்டபுஷ்பங்களாக பூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் நந்தியாவர்தம்,அரளி ஆகியவை வீடுகளிலேயே வளர்க்கப்படுகின்றன. இவற்றைத் தவிரவும், மல்லிகை,முல்லை,பாரிஜாதம், மயில் கொன்றை ,விருக்ஷி போன்ற புஷ்பச் செடிகளையும், வில்வ மரத்தையும் வீடுகளில் பூஜைக்காக வளர்ப்பது உண்டு.

புன்னை: இம்மரம் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுவது. மயிலாப்பூரில் புன்னை மரத்தின் நீழலில் கபாலீச்வரர் வீற்றிருப்பதை , "மட்டிட்ட புன்னையங்கானல்" என்று துவங்கியபடி பதிகம் பாடுகிறார் சம்பந்தர். இக்கோயிலில் புன்னை மரம் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. பசுமையான இலைகளையும் வெள்ளை நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது இம்மரம். இதில் கோடைக்காலத்தில் பூக்கள் அதிகமாக இருக்கும்.






சண்பகம்: வாசனை மிக்க இம்மலர்கள் சித்திரை முதல் புரட்டாசி வரை பூக்கக் கூடியவை. இம்மரத்தின் இலைகளும் பசுமையாக இருப்பவை. செண்பகவல்லி என்று அம்பாளுக்கும் சென்பகாரன்யேச்வரர் என்று சுவாமிக்கும் பெயர்கள் வழங்குவதைப் பார்க்கலாம்.





பாதிரி: நீண்ட மலர்களைக் கொண்ட பாதிரி மரம் உயரமாக வளரக்கூடியது. இம் மலர்கள் வாசனையானவை. இதனைத் தல விருக்ஷமாகக்கொண்ட ஸ்தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும்.

வெள்ளெருக்கு:
வெள்ளெருக்கும் பாம்பும் சுவாமியின் ஜடையில் விளங்குவதை, "வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை" என்று அப்பர் தேவாரம் குறிப்பிடுகிறது. முதலில் சிறிய செடியாக விளங்கி , சிறிய மரமாகவும் வெள்ளெருக்கு வளர்ச்சி பெறுகிறது. வெண்மை நிறம் கொண்ட இம்மலர்கள் ஆண்டின் பல மாதங்களில் பூக்கக் கூடியவை. எருக்கத்தம்புலியூர் என்ற சிவ ஸ்தலத்தில் இம்மரம் விருக்ஷமாக விளங்குகிறது.

நந்தியாவர்தம்: நந்தியாவட்டை என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுவது. வருடம் முழுவதும் பூக்கக்கூடியது. வெள்ளை நிறம் கொண்ட இம்மலர்களை மாலையாகவும் அர்ச்சனைக்கும் பயன் படுத்துவர்.


அரளி:

இதுவும் மாலைகளில் பயன்படுத்தப்படுவது. அர்ச்சனைக்கும் பயன்படுத்துவர். அநேகமாக ஆண்டு முழுவதும் பூப்பதால் நந்தவனங்கள் மற்றும் வீடுகளில் இச்செடியை வளர்க்கிறார்கள்.

நீலோத்பலம்:

நீர்நிலைகளில் வளரக்கூடியது. இதைக் குவளை என்றும் சொல்வர். கண்களுக்கு இதை உதாரணம் காட்டுவார்கள். "குவளைக்கண்ணி " என்று அம்பாளைத் திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவாரூரில் அம்பாளுக்கு, நீலோத்பலாம்பிகை என்று பெயர்.

தாமரை: தாமரையில் மகா லக்ஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இத் தாமரை மலர் குளங்களிலும் நீர் நிலைகளிலும் வளர்வதைக் காணலாம். ஆயிரம் தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் மகாவிஷ்ணு சிவ பூஜை செய்து சக்கரம் பெற்றதாக அந்த ஊர்ப் புராணம் சொல்கிறது. அதற்காகவே பஞ்சாக்ஷர சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்தாராம் விஷ்ணு.

ஊமத்தை ,மந்தாரை, மகிழம்பூ,போன்ற புஷ்பங்களையும் ஈச்வரன் ஏற்றுக்கொள்கிறான். இருந்தாலும் மேலே சொன்ன அஷ்ட புஷ்பங்களே மிகவும் உயர்வாகக் கூறப்படுகின்றன. இந்த "எட்டு நாண்மலர் " கொண்டு ஈசனது பாதார விந்தங்களுக்கு அர்ச்சித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும் என்று அப்பர் தேவாரம் நமக்கு உணர்த்துகிறது.

ஸ்ரீ பரமேச்வரனது பாதங்களோ இயற்கையிலேயே வாசனை மிக்கவை. அம மலர்ப்பாதங்களுக்கு மலர்களால் அர்ச்சிக்கிறோம். "நறுமலராய் நாறும் மலர்ச் சேவடி " என்று இதைக் குறிப்பிடுவார் அப்பர் ஸ்வாமிகள். இப்படி இயற்கையிலேயே மணம்மிக்க பாதங்களைச் சுற்றி ரீங்காரம் செய்கின்றனவாம் வண்டுகள். ஆகவே, "வண்டினங்கள் சூழ்ந்த அடி" என்பார் அப்பர் பெருமான்.

முருக நாயனார் திருப்புகலூர் வர்தமாநீச்சரத்தில் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தவர்.பக்தியையும் கூடவே பகவானுக்கு மாலையாகச் சார்த்தி மகிழ்ந்தவர்.அந்த ஊர்ப் பதிகத்தில் முருக நாயனாரது இத்தொண்டு திருஞான சம்பந்தரால் போற்றப்படுகிறது.


அத்தகைய மலர்ப்பாதங்களை நாமும் அஷ்ட புஷ்பங்களால் அர்ச்சித்து சஞ்சித வினைகள் நீங்கி , பிறப்பு இறப்பு இல்லாத நிலையை அடைவோமாக.


by
அகத்தியர்அடிமை வலைப்பூ

சில பயனுள்ள சிவ மந்திரங்கள்


மனதைத் திடப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும். உரு(எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்கும் நன்மையைப் பற்றிக் கூறுகிறார்.
திரு என்றால் பிரகாசமான என்று அர்த்தம். எல்லோரையும் கவரும் காந்தசக்தி என்றும் கூறலாம். வாழ்க வளமுடன் என்பதும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமே! நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு; அதை விட திருமந்திரம், பெரிய புராணம், கந்த சஷ்டிகவசம், கந்தரலங்காரம், திருப்பாவை முதலான தமிழ் ஆன்மீகப் படைப்புகளுக்கு நாம் அவற்றை பாடும் போதும் மனதிற்குள் ஜபிக்கும் போதும் சக்தி அதிகம்.இதற்குச் சம்மான சக்தி கொண்டவையே சமஸ்கிருத மந்திரங்கள்.அவற்றில் பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம் கிடையாது.ஆனால், அவற்றை முறையாக உச்சரிக்கும்போது அது மனிதநலத்தை அதிகப்படுத்துகிறது.இது தொடர்பாக ஒலியியல் விஞ்ஞானம் என்ற புதிய அறிவியல்துறை உருவாக்கப்பட்டு இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது மாற்றும் வலிமை உண்டு என கண்டறியப்பட்டுவிட்டது.மேலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.இத்தகு ஆராய்ச்சிகள் ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து நாடுகளில் நடைபெறுகின்றன.
வேதிக் ரிசர்ச் ரிசல்ட்ஸ் என்ற பெயரில் கூகுளில் தேடிப்பார்க்கவும்.சில சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும். ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷிசிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி


by

அகத்தியர்அடிமை வலைப்பூ



Wednesday, October 20, 2010

வீட்டு மூலிகை தோட்டக் கையேடு


மிக எளிதாக நம்மை சுற்றி கிடைக்கும் மூலிகை செடிகள் குறித்து அவை மூலிகை செடிகள் என்பதையே நாம் அறியாமல் இருக்கிறோம். அவற்றுள் சிலவற்றையே பாட்டி கை வைத்தியம் வழியாக நாம் அறிந்திருக்கிறோம். எனவே தமிழ் மக்கள் வீடுகளில் நிற்கும் இத்தகைய 14 மூலிகை செடிகளை கண்டறிந்து அவற்றின் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகளையும் கொண்டு ஒரு கையேட்டினை தந்துள்ளது விவேகானந்த கேந்திரம். மனையடி மூலிகை மருத்துவம் எனும் இக்கையேட்டில் நெல்லை சீமையின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் கணபதி அவர்கள் இந்த 14 மூலிகை செடிகளின் விவரங்களை அளித்துள்ளார்கள். இம்மூலிகைகளை வீடுகளில் மட்டுமன்றி பொது இடங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களில் வளர்க்க வேண்டும் என்ற நோக்குடனேயே இக்கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எவரும் எளிய மருந்துகளை தயார் செய்ய இயலும். இம்மூலிகைகள் அதிக இடம் , அதிக பொருட்செலவு, அதிக நீர் வசதி ஆகியவை கேட்காதவை ஆகும். பாரதம் ஆரோக்கியமான தேசமாக உருவாக இந்த கையேடு பயனளிக்கும் என நம்பலாம்.

இக்கையேட்டில் 14 மூலிகை செடிகளின் கறுப்பு-வெள்ளை படங்களை அளித்துள்ளார்கள். அத்துடன் மூலிகையின்
  • வழங்கு பெயர்,
  • அறிவியல் பெயர்
  • மருந்துக்கு உதவும் பாகங்கள்
  • கட்டுப்படுத்தும் நோய்கள்
  • சுத்தி செய்தல்
  • பயன்படும் முறை
  • வளர்க்கும் விதம்

ஆகியவை ஒவ்வொன்றிற்கும் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக மாதுளையை எடுத்துக்கொள்வோம்.
  • Punica granatum
  • இனம் : செடி
  • மருந்துக்கு உதவும் பாகங்கள்: பழம், பழவோடு, பிஞ்சு
  • கட்டுப்படுத்தும் நோய்கள்: பேதி, இரத்தக் கிராணி, பாண்டு (வெளுப்பு) மேகநோய் ஆகிய பிணிகள் நீங்கி உடற்பலம் உண்டாகும்.
  • பயன்படுத்தும் விதம்:
    • 1. 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும்.
    • 2. பழச்சாற்றை தேவைக்கேற்ப பருகிவர பாண்டு நீங்கி உடற்பலம் தரும்.
    • 3. இதன் பழஓட்டை நிழலில் காயவைத்து பொடியாக்கி 5-10 கிராம் வீதம் 3 வேளை பொடித்துண்ண பேதி வயிற்றுப்புண் நீங்கும்.
    • 4. மாதுளம் பிஞ்சு தளிர் இவைகளை 20 கிராம் அளவு எடுத்து நன்கு அரைத்து பாலில் மூன்று வேளை வீதம் உண்டுவர மேகநோய், வெள்ளைப்போக்கு நிற்கும்.
    • 5. வாய்ப்புண் குணமாக இதன் தளிரை தேவைக்கேற்ப மென்று தின்ன குணமாகும்.
    • 6. இதன் பழ-ஓட்டைப் பொடித்து அதனுடன் வெந்தயம் பொடி சமபங்கு சேர்த்து 5-8 கிராம் வரை தினமும் 3 வேளை வீதம் உண்டுவர மேகநோய், பாண்டு அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகியவை குணமாகும்.
  • வளர்க்கும் விதம்: விதை, குச்சி.


இவ்விதமாக கீழ்கண்ட 14 மூலிகைச்செடிகள் குறித்து கூறப்பட்டுள்ளது:

  • 1. சோற்றுக்கற்றாழை : Aloe vera

  • 2. நெல்லி : Emblica officinalis

  • 3. செம்பரத்தை : Hibiscus rosasinensis

  • 4. துளசி : Ocimum sanctum

  • 5.தூதுவளை:Solanum trilobatum

  • 6.கற்பூரவள்ளி: Plectranthus ambonicus

  • 7.நிலவேம்பு: Andrographis paniculata

  • 8.மாதுளை:Punica granatum

  • 9.மஞ்சள் கரிசாலை: Wedelia calendulacea

  • 10. ஆடாதோடை: Adhatoda vasica

  • 11. பப்பாளி: Carrica papaya

  • 12. முருங்கை: Moringa indica (Moringa oleifera)

  • 13. நொச்சி : Vitex negundo

  • 14. மணத்தக்காளி : Solanum nigrum
by

வளங்குன்றா வளர்ச்சி

Friday, October 8, 2010

நவராத்திரி பற்றி பாரதியார்

நவராத்திரி பற்றி பாரதியார்

சக்திதாசன் என்று தம்மை அழைத்துக் கொண்ட மகாகவி பாரதியார் அன்னை பராசக்தியைப் போற்றும் உன்னதத் திருவிழாவான நவராத்திரியைக் கொண்டாடுவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

நவராத்திரித் திருநாளின் மகத்துவம் பற்றிய அவரது சிறு கட்டுரை –

ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.

மஹாளய அமாவாசை கழிந்தது.

இருளும், ஒளியும் மாறிவருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு, மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய. சில சமயங்களில் கிரகணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும் மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு. இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு. இரவு என்பது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல். இரவு லயம்.

சக்தி. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம். உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக சம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகீகக் கவலைகளிலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப் படும் சாமான்ய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலை பெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், தவம், கல்வி இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும். இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

சக்தியால் உலகம் வாழ்கிறது.
நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

(நன்றி: பாரதியார் சிந்தனைச் செல்வம் (தொகுப்பு: கங்கா ராமமூர்த்தி, பாரதி காவலர் கே ராமமூர்த்தி), ஸ்ரீராம் டிரஸ்ட் வெளியீடு, 1988.

ஒருமுறை நவராத்திரியின்போது, தன் மகள் தங்கம்மாவும், அவள் தோழிகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அன்னை பராசக்தியின் பேரில் “நவராத்திரிப் பாட்டு” என்ற அழகிய பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் -

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா ஸரஸ்வதி ஸ்ரீமாதா ஸா (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுர தேவன்
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்திலிருத்தி
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினீ)

“உஜ்ஜயினீ” என்ற தேவியின் திருப்பெயரின் பொருள் “மேன்மேலும் வெற்றி பெறுபவள்” என்பது. வெற்றி தருபவள் என்றும் கொள்ளலாம். அன்னை காளீயின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் (குப்த வம்சத்து அரசன்), தான் புதிதாக அமைத்த தலைநகரத்திற்கு அன்னையின் இப்பெயரைச் சூட்டினான். மத்தியப் பிரதேசத்தில் க்ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த “”உஜ்ஜைன்” என்ற இந்த நகரம் 52 சக்தி பீடங்களிலும், 12 ஜ்யோதிர்லிங்கத் தலங்களிலும் ஒன்றாக வைத்து எண்ணப் படும் பெருமை வாய்ந்தது.

இரண்டாம் அடியில் வரும் “உஜ்ஜய” என்ற சொல்லுக்கு உத்பத்தி, சிருஷ்டி என்றும் பொருள் கொள்ளலாம். எல்லா சிருஷ்டிக்கும் காரணனான சங்கரனின் தேவி என்று தேவியைப் புகழ்கிறார்.

“ஸா” என்பதன் பொருள் “அவள்” (சம்ஸ்க்ருதத்தில்). இப்படி எழுவாய்ச் சொல்லிலேயே சம்ஸ்க்ருதத்தைப் பயன்படுத்தி இருப்பது சிறப்பு, தமிழ் மணிப்ரவாள நடையில் அபூர்வம். அது மட்டுமல்ல “ஸா” என்பது பரதேவதையின் பெயர்களில் ஒன்றான மந்த்ர அக்ஷரமும் கூட.

“மஹேசுர தேவன் தோழி” என்பதும் அழகிய சொல்லாட்சி. சத்ய யுகத்தை நிலைநிறுத்தும் திறன் வேண்டி பாடல் முடிகிறது.

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.



by

Author ஜடாயு

www.tamilhindu.com

Wednesday, October 6, 2010

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்.

பொருளடக்கம்


  • 1 சிவ வணக்கம்
  • 2 சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள்
  • 3 தத்துவ அடிப்படைகள்
  • 4 சித்தாந்தமும் வேதாந்தமும்
  • 5 சைவசித்தாந்தமும் அதன் சமூக நிலைப்பாடுகளும்

சிவ வணக்கம்

சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்க வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர். தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது.

சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள்

இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன.
சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.

தத்துவ அடிப்படைகள்

  1. பதி (இறைவன்)
  2. பசு (உயிர்)
  3. பாசம் (மலங்கள்)
ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது.
  • இறைவன்: அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன்.
  • உயிர்: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும்.
  • மலங்கள்: மலங்கள் சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது.

சித்தாந்தமும் வேதாந்தமும்

"உமாபதி சிவம் நெஞ்சுவிடுதூது என்னும் சிந்தாந்த பிரபந்தத்தில் உலகாயதம், வேதாந்தம், பெளத்தம், சமணம், மீமாம்சகம் ஆகிய தத்துவங்களைச் சித்தாந்தப் பார்வையில் மறுத்துக் கூறிச் சித்தாந்த சைவத்தினை நிலைநாட்டியுள்ளார்."

சைவசித்தாந்தமும் அதன் சமூக நிலைப்பாடுகளும்

சைவ சித்தாந்தம் சாதியமைப்பை பெருமாபாலும் ஏற்றுக்கொண்டு, அதனை வலியுறுத்துகின்றது. இது அது தோற்றம் கண்ட காலத்தில் (சோழர் காலம்) இருந்தே இருந்து வருகின்றது. பிராமணர் அல்லாதவர்கள் இந்தக் கட்டமைப்பில் அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்களாகவும், மதக்குருமார்களான பிராமணர்கள் சடங்கு ரீதியில் முக்கியத்துவம் பெறுவர்களாகவும் இருக்கின்றார்கள்.

by
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிவபுராணம்

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.

பொருளடக்கம்


  • 1 சிவபுராணத்தின் நோக்கம்
  • 2 சிவபுராணத்தின் அமைப்பு
  • 3 சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்
    • 3.1 இறைவன்
    • 3.2 உயிரும், மலங்களும்
    • 3.3 பிறவிச் சுழல்

சிவபுராணத்தின் நோக்கம்

முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.

சிவபுராணத்தின் அமைப்பு

உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.
  • நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
  • பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.
  • பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.
  • இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.
  • 50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும் தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
  • தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.
  • மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.

சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.
  • இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புக்கள் வருகின்றன.
இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை.
  • சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.

இறைவன்

சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.
  • மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
  • ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
  • விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே
  • அளவிலாப் பெம்மானே
  • தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
  • போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
  • அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய்

உயிரும், மலங்களும்

உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் கன்மம் என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் மாயை என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.
  • எஞ்ஞானம் இல்லாதேன்
  • பொல்லா வினையேன்
  • வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
  • மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
  • வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்

பிறவிச் சுழல்

உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.
  • புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
  • வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்.

இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன.
  • பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்.
  • மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்.
  • பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்.
  • அல்லல் பிறவி அறுப்பானே
  • கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
  • அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
  • பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
  • என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின
  •  
     
     by
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
     

Friday, October 1, 2010

காலத்தை வென்ற கலைக்கோயில்



தஞ்சைப் பெரியகோயில்
தஞ்சைப் பெரியகோயில்
பெருவுடையார் கோயில், ராஜ ராஜேஸ்வரம், பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன.
தென் இந்தியாவை ஆண்ட மிகவும் சக்தி வாய்ந்த அரசவம்சமான சோழர்களின் வலிமையையும், நாட்டின் வளத்தையும், கலை நயத்தையும் காலத்தை கடந்து பறைசாற்றும் சின்னமாக இருக்கிறது இந்தக் கற்கோயில்.

இந்தக் கோயில் 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரிந்தாலும் கோயிலை கட்டும் பணியை ராஜ ராஜன் எப்போது ஆரம்பித்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்று கூறுகிறார் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ஆர் நாகசாமி.
இக் கோயில் முழுவதும் பாறங்கற்களால் கட்டப்பட்டது. கற்களை தேவைப்படும் அளவுக்கு செதுக்கி ஒன்றன் மேல் மற்றொன்றை பொருத்தி இக் கோபுரம் அமைக்கப்பட்டது. கம்பீரமாக 60 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கும் 13 அடுக்குகளைக் கொண்ட இக் கோபுரத்தின் உட் பகுதி வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. 240 மீட்டர் நீளமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட இக்கோயிலின் பிரதான தெய்வமாக இருக்கும் சிவலிங்கம் 5 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டது, நந்தியும் மிகப் பெரியது.
அக்காலத்தில் இந்தியாவின் உயரமான கட்டிடமாக இது இருந்தது என்று கூறும் ஆய்வாளர்கள், கோபுரத்தின் சிகரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுப்பட்டுத்தப்பட்ட அளவில் சுண்ணாம்புப் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

கோயிலை கட்டப் பயன்படுத்தப்பட்ட கிரனைட் வகைக் கற்கள் மிகவும் கடினமானவை. தொழில் நுட்பம் வளர்ந்த தற்காலத்தே - கற்களை உடைத்து சிற்பம் வடிப்பது கடினமான பணி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இதை நம் முன்னோர்கள் எப்படி சாதித்தனர்? என்பது பெரிய கேள்வியாகவே இருந்து வருகிறது.
உளியையும் சம்மட்டியையும் வைத்தே இக் கோயிலை கட்டியதாகக் கூறுகிறார் குமரிக் கடலில் வள்ளுவருக்கு 133 அடி சிலை அமைத்த கணபதி ஸ்தபதி.
எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் அதே அடிப்படை தத்துவம் இங்கும் பின்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இந்தக் கோயிலின் முதல் குடமுழுக்க நடந்த சில காலத்தே ராஜ ராஜன் இறந்து விட - அவர் மகன் முதலாம் ராஜேந்திரன் - பெரிய கோயிலுக்காக ராஜ ராஜன் வழங்கிய நில மான்யங்கள் பலவற்றை தான் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு மாற்றி விட்டார்.
பெரிய கோயிலை விட பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்று நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கட்டுவதற்கு கட்டிடக் கலைஞர்களையும் - சிற்ப வல்லுனர்களையும் ரஜேந்திரன் அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே ஒரு விதத்தில் பெரிய கோயில் முற்றுப் பெறாத ஒரு கோயில் என்றே சொல்ல வேண்டும்.
உச்சி காலப் பொழுதில் கோயில் கோபுரத்தின் நிழல் கோபுரத்துக்குள்ளேயே விழும்படி உச்சி குறுகலாகவும் அடி பரந்தும் இருப்பதால் இக் கோயில் கோபுரம் நிழல் விழாக் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
சோழர் வரலாற்றை விளக்கும் ஏராளமான கல்வெட்டுக்களும் - அரிய ஒவியங்களும் இக் கோயிலுக்குள் உள்ளன. மலைகள் இல்லாத காவேரிப் படுகைப் பகுதியில் - இக் கோயிலை நிர்மாணிக்க - சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலையில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார் அறிஞர் நாகசாமி. பிரதான கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சிகரம் போன்ற அமைப்பு ஒரு கல்லால் அமைந்ததில்லை என்கிறார் அவர்.
சாரப்பள்ளத்தில் இருந்து மண் மேடை அமைக்கப்பட்டு இந்தக் கல் கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுவது சரியல்ல என்றும் நாகசாமி கூறுகிறார்.
அதே நேரம் இந்தக் கோயில் ஆள்பவருக்கும் - அரசியல்வாதிகளுக்கும் ராசியில்லாத கோயில் என்ற கருத்தும் இருக்கிறது. பக்தர்கள் செல்லும் புனித ஸ்தலங்களின் பட்டியலில் இந்தக் கோயில் இல்லை. இருந்தும் இந்தக் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. உள்ளூர் வாசிகள் ஊரின் பெருமை இது என சிலாகித்துப் பேசுகின்றனர்.
இந்தக் கோயிலின் உட்புறம் சுத்தமாக காட்சியளித்தாலும், கோயிலுக்கு அருகேயே குப்பை கூளங்கள் கொட்டப்பட்டிருப்பதை நம்மால் காணமுடிந்தது. யுனேஸ்கோவால் உலக பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்தக் கோயிலின் பிரதான கோபுரத்துக்கு சில அடி தூரத்திலேயே மேற்கொள்ளப்பட்ட ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி
நீதிமன்றத் தலையீட்டால்தான் சில வாரங்களுக்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்டது.
பல புயல்களையும், 6 நில நடுக்கங்களையும், ஒரு பெரும் தீ விபத்தையும் சந்தித்த இத் திருக்கோயில் மனிதத் தலையீட்டை தாண்டி அடுத்த ஆயிரம் ஆண்டுகளை எப்படி சந்திக்கப் போகிறது என்ற கவலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கோயில் விளக்கை ஏற்றுவதற்குத் தேவையான நெய்யை வழங்குவதற்காகவே ஆடுகளையும் மாடுகளையும் தானமளித்துள்ளான் ராஜ ராஜ சோழன். ஆனால் இன்றோ கோயிலில் மின்சாரத்தால் இயங்கும் மணியும் மேளமும் - மங்கல வாத்தியத்துக்கு பதிலாக ஒலிக்கின்றன

news by
BBCTamil.com

கட்டிடக்கலை

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும்.

மேற்படி விடயத்தில், தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஆக்கமான விட்ருவியஸ் என்பாரது "கட்டிடக்கலை தொடர்பில்", என்ற நூலின்படி, நல்ல கட்டிடம், அழகு, உறுதி, பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். மேற்படி மூன்றும், ஒன்றின்மீதொன்று அளவுமீறி ஆதிக்கம் செலுத்தாமல், தங்களிடையே சமனிலையையும், ஒருங்கினைப்பையும் கொண்டிருத்தலே கட்டிடக்கலை என்று சொல்லலாம். ஒரு நவீன வரைவிலக்கணம், கட்டிடக்கலையைச், செயற்பாட்டு, அழகியல், உளவியல் என்பன தொடர்பான விடயங்களைக் கையாளல் என்ற விதத்தில் நோக்குகிறது. எனினும், இன்னொரு விதத்தில் பார்த்தால், செயற்பாடு என்பது, அழகியல், உளவியல் உட்பட்ட எல்லா அளபுருக்களையும் (criteria) தன்னுள் அடக்குவதாகக் கொள்ளலாம்.
கட்டிடக்கலை, கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம், பொன்றவற்றுடன் தொடர்புள்ள, ஒரு பல்துறைக் களமாகும். விட்ருவியசின் சொற்களில், "கட்டிடக்கலையென்பது, வேறுபல அறிவியல் துறைகளிலிருந்து எழுவதும், பெருமளவு, பல்வேறுபட்ட அறிவுத்துறைகளினால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு அறிவியலாகும்: இதன் உதவியைக் கொண்டே பல்வேறு கலைத் துறைகளினதும் விளைவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன". மேலும் ஒரு கட்டிடக் கலைஞன், இசை, வானியல் முதலிய துறைகளிலும் நல்ல பரிச்சயமுடையவன்னயிருக்க வேண்டும் என்பது விட்ருவியசின் கருத்து. தத்துவம் குறிப்பாக விருப்பத்துக்குரியது. உண்மையில், அணுகுமுறை பற்றிக் கருதும்போது, ஒவ்வொரு கட்டிடக் கலைஞனதும் தத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறோம். பகுத்தறிவியம் (rationalism), பட்டறிவியம் (empiricism), கட்டமைப்பியம் (structuralism), பின்கட்டமைப்பியம் (poststructuralism) மற்றும் தோற்றப்பாட்டியல் (phenomenology) என்பன போன்ற போக்குகள், கட்டிடக்கலையில், தத்துவத்தின் செல்வாக்கைக் காட்டும் சில உதாரணங்களாகும்.

பொருளடக்கம்


  • 1 கட்டிடக்கலைக் கோட்பாடுகள்
    • 1.1 கட்டிடங்களும், கட்டிடக்கலையும்
    • 1.2 கட்டிடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள்
    • 1.3 கட்டிடக்கலைஞர்களும் கோட்பாடும்
  • 2 வரலாறு
    • 2.1 தொல்பழங்காலமும் கட்டிடக்கலையும்
    • 2.2 பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை
    • 2.3 மெசொப்பொத்தேமியக் கட்டிடக்கலை
    • 2.4 பண்டைய கிரேக்க கட்டிடக்கலை
    • 2.5 பண்டைய ரோமக் கட்டிடக்கலை
    • 2.6 மறுமலர்ச்சிக்காலமும் கட்டிடக்கலைஞரும்
    • 2.7 நவீனத்துவமும் கட்டிடக்கலையும்
    • 2.8 கட்டிடக்கலை இன்று

கட்டிடக்கலைக் கோட்பாடுகள்

கொலோசியம், ரோம், இத்தாலி
லியொன் பட்டிஸ்டா ஆல்பர்ட்டி என்பவர் தான் எழுதிய நூலொன்றில் விட்ருவியசின் கருத்துக்களை விரிவாக்கினார். அலங்காரங்களும் அழகுக்குப் பங்களிப்புச் செய்த போதிலும், அழகு என்பது, அளவுவிகிதம் (proportion) தொடர்பிலானது என்று இவர் எழுதினார். ஆல்பர்ட்டியின் கருத்துப்படி ஒரு முறையான உடலமைப்புக் கொண்ட மனிதனின் உடலின் அளவுவிகிதங்களைக் கட்டுப்படுத்தும் விதிகளே சிறப்பான அளவுவிகிதங்களுக்கான விதிகளாகும். அழகைப் பொருளின் தன்மைக்குப் புறம்பாக வெளியிலிருந்து கொண்டுவந்து ஒட்டவைக்க முடியாது, பொருள்களோடு அவற்றின் அழகு இயல்பாக அமைந்திருக்கிறது என்னும் கருத்தே இங்கு முக்கியமான அம்சம். கட்டிடக்கலையிலும், பிற அழகியல் கலைகளிலும் பாணி என்னும் ஒரு அம்சம் இடைக்காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால், பாணி என்னும் கருத்துரு 16 ஆம் நூற்றாண்டில் வாசரி என்பவர் எழுதிய நூல்களினூடாகவே அறிமுகமானது. இந் நூல்கள் 18 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மொழி, பிரெஞ்சு மொழி, ஸ்பானிய மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் கலைத் திறனாய்வாளரான ஜான் ரஸ்கின் என்பவர் 1849 வெளியிட்ட "கட்டிடக்கலையின் ஏழு விளக்குகள்" என்னும் நூலில், "கட்டிடக்கலை என்பது அதனைக் காண்போருக்கு உள நலத்தையும், ஆற்றலையும், இன்பத்தையும் தரக்கூடிய வகையில், அமைத்து, அலங்கரித்து உருவாக்கப்பட்ட கட்டிடங்களாகும்" என்றார். ரஸ்கினுக்கு, கட்டிடக்கலையைப் பொறுத்தவரை அழகியலே யாவற்றிலும் முக்கியமான அம்சமாக இருந்தது. மேலும், ஏதோ ஒரு வகையில் அலங்கரிக்கப்படாத கட்டிடங்கள் கட்டிடக்கலை ஆகாமாட்டா என்ற கருத்தையும் அவர் கொண்டிருந்தார்.

கட்டிடங்களும், கட்டிடக்கலையும்

ஒரு கட்டிடக்கலைசார்ந்த கட்டிடத்துக்கும், சாதாரண கட்டிடத்துக்கும் உள்ள வேறுபாடு பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விடயமாக இருந்துவருகின்றது. இது குறித்து எழுதிய பிரபலமான பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியே, " நீங்கள், கற்கள், மரம், காங்கிறீட்டு என்பவற்றைக் கொண்டு ஒரு வீட்டையோ மாளிகையையோ அமைக்கலாம். அது கட்டுமானம். ஆனால் ஆக்கத்திறன் சிறப்பாக அமையும்போது, அது எனது நெஞ்சைத் தொடுகிறது, நீங்கள் எனக்கு நல்லது செய்திருக்கிறீர்கள். மிகவும் அழகாக இருக்கிறது என்கிறேன் நான். அதுவே கட்டிடக்கலை. 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாற்றாசிரியரான "நிக்கொலஸ் பெவ்ஸ்னர்" என்பாருடைய கூற்றுப்படி, ஒரு துவிச்சக்கரவண்டிக் கொட்டகை ஒரு சாதாரண கட்டிடமும், லிங்கன் பேராலயம் ஒரு கட்டிடக்கலை சார்ந்த கட்டிடமுமாகும். தற்காலச் சிந்தனைப் போக்குகளுக்கு அமைய இத்தகைய பிரிவு அவ்வளவு தெளிவானதாக இல்லை. "பெர்னாட் ருடோவ்ஸ்கி" என்பாரது "கட்டிடக்கலைஞன் இல்லாத கட்டிடக்கலை" (Architecture without architects) என்னும் பிரபலமான நூல், சாதாரண மக்களால் கட்டப்பட்ட பல்வேறு தரத்திலான கட்டிடங்களையும், கட்டிடக்கலையின் ஆளுகைக்குள் கொண்டுவந்தது. வரலாற்றில் பின்னோக்கிச் செல்லும்போது, கட்டிடக்கலைசார் கட்டிடங்கள் எவை, அவ்வாறில்லதவை எவை என்பதிலே கருத்தொற்றுமை காணப்பட்டது. விருவியசைப் போல், நல்ல கட்டிடங்களே கட்டிடக்கலைசார்ந்த கட்டிடங்கள் என வரைவிலக்கணப்படுத்தினால், கூடாத கட்டிடக்கலைசார்ந்த கட்டிடங்கள் இல்லையா என்ற கேள்வி எழும். இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு, கட்டிடக்கலைசார் கட்டிடங்கள் என்பதற்கு, கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள் என்றும் வரைவிலக்கணம் கூறலாம் எனச் சிலர் கூறுகிறார்கள். இது கட்டிடக்கலைஞர் என்பதன் வரைவிலக்கணம் பற்றிய இன்னொரு சர்ச்சையை உருவாக்குவதைத் தவிர்க்க முடியாது.

கட்டிடக்கலையின் தற்காலக் கருத்துருக்கள்

The Wainwright Building in St. Louis, designed by Louis Sullivan.
Europe's Gate, Madrid; an example of buildings intentionally built at an incline
19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் லூயிஸ் சலிவன் கட்டிடக்கலை வடிவமைப்பில் புதிய நோக்கு ஒன்றை வளர்ப்பதற்கு முயற்சித்தார். செயற்பாட்டுத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நோக்குக்கு அமைய "செயற்பாட்டுத் தேவைகளிலிருந்தே வடிவம் உருவாகின்றது" (Form follows function) என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. செயற்பாட்டு நோக்கின் அடைப்படையிலேயே அமைப்பும் அழகியலும் நோக்கப்படவேண்டும் என்னும் இக் கருத்து பரவலான ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றது. செயற்பாடு என்னும் இப் புதிய கருத்துரு கட்டிடங்களின் உளவியல், அழகியல், பண்பாட்டுப் பயன்கள் உட்பட எல்லா வகையான பயன்களும் குறித்த எல்லா அளபுருக்களையும் தன்னுள் அடக்கியிருந்தது.

கட்டிடக்கலைஞர்களும் கோட்பாடும்

பல கட்டிடக்கலைஞர்கள் கோட்பாட்டை ஒதுக்கித் தள்ளினாலும், செயல்முறையை (practice) வளம்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. விட்ருவியஸ் தொடர்ந்து சொன்னபடி, "செய்முறையும், கோட்பாடும் கட்டிடக்கலையின் பெற்றோருக்குச் சமம். செயல்முறை என்பது, கொடுக்கப்பட்ட வேலைகளை நடைமுறைப்படுத்தும் முறைகளைக் கைக்கொள்ளும்போது, அடிக்கடி நிகழும், தொடர்ச்சியான, சமநிலைப்படுத்தும் செயலை, அல்லது வெறுமனே உடற் செயல்பாட்டின்மூலம், ஒரு பொருளைச் சிறந்த பயன்படத்தக்க ஒன்றாக மாற்றுவதைக் குறிக்கும். கோட்பாடு என்பது, ஒரு பொருள், பிரேரிக்கப்பட்ட முடிவை அடையும்வகையில், மாற்றப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதும், விளக்குவதுமான காரணத் தொடர்பாக்கத்தின் விளைவாகும். வெறுமனே செய்முறையிலூறிய கட்டிடக்கலைஞன், தான் எடுத்துக்கொண்ட வடிவுருக்களுக்கான (forms) காரணங்களை எடுத்துக்காட்ட முடிவதில்லை; கோட்பாட்டுக் கட்டிடக்கலைஞனும், பொருளை விட்டு நிழலைப் பிடிப்பதன் மூலம் தோல்வியடைகிறான். எவனொருவன் கோட்பாடு செயல்முறை இரண்டிலும் வல்லவனாக இருக்கிறானோ அவன் இரட்டைப் பலமுள்ளவன்; தன்னுடைய வடிவமைப்பின் தகுதியை நிரூபிக்கக்கூடியவனாக இருக்கின்றது மட்டுமன்றி, அதைத் திறமையாகச் செயற்படுத்தக்கூடியவனயும் இருப்பான்."

வரலாறு


 கட்டிடக்கலை வரலாறு

தொல்பழங்காலமும் கட்டிடக்கலையும்

விருபக்ச கோயில், ஹம்பி, இந்தியா
கட்டிடக்கலையென்பது, ஆரம்பத்தில், தேவைகளுக்கும், (உகந்த சூழல், பாதுகாப்பு என்பன) Means (கிடைக்கக் கூடிய கட்டிடப்பொருள்கள், தொழில் நுட்பம் முதலியன) என்பவற்றுக்கிடையிலான இயக்கப்பாடுகளிலிருந்து பரிணமித்ததாகும். தொல்பழங்கால, பழங்காலக் கட்டிடங்கள் இவ்வகையைச் சேர்ந்தனவாகும். மனித முன்னேற்றத்துடன், அறிவுத்துறைகளும், வாய்மொழி மரபுகளினாலும், செயல்முறைகளினாலும், ஒழுங்கமையத் தொடங்கியபோது, கட்டிடம் கட்டுதல் ஒரு கலையாக உருவானது. இங்கே முதலில் முயன்று தெரிதல் (Trial and Error) முறையின் பயன்பாடு, பின்னர் அவற்றில் தேவைக்கேற்ற மாற்றங்கள் அல்லது வெற்றிகரமான முயற்சிகளைப் பிரதிபண்ணல் எனப் பரிணாம வளர்ச்சி நடைபெற்றது. கட்டிடக்கலைஞர் மட்டுமே இங்கு முக்கியமானவர் அல்ல. இவர்கள் பங்கு சதவீத அடிப்படையில் மிகக் குறைவே; விசேடமாக வளரும் நாடுகளில் இது 5% அளவுக்கும் குறைவே என்றும் கூறப்படுகின்றது. அவர் தொடர்ந்துவரும் கட்டிடக்கலை மரபுகளில் ஒரு பகுதியேயாவர். நாட்டார் மரபு "(Vernacular Tradition)" என்று அழைக்கப்படும் மரபுசார் கட்டிடமுறை இதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். உலகின் எல்லாப் பகுதிகளிலும், பெரும்பாலான கட்டிடங்கள் இம்முறையிலேயே கட்டிடக்கலைஞர் அல்லாதவர்களால் உருவாக்கப்படுகின்றன.
முற்கால மனிதர் குடியிருப்புகள் கிராமம் சார்ந்தவையாகும். உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டபோது கிராமச் சமுதாயங்கள் நகர்சார் சமுதாயங்களாக வளர்ச்சி பெறத்தொடங்கின. கட்டிடங்கள் அதிக சிக்கலானவையாக ஆனதுடன், அவற்றின் வகைகளும் அதிகரித்தன. வீதிகள், பாலங்கள் போன்ற குடிசார் கட்டுமானங்களும், பாடசாலைகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகளுக்கான கட்டிடங்கள் எனப் புதிய கட்டிடவகைகளும் பெருகத்தொடங்கின. எனினும் சமயம் சார்ந்த கட்டிடக்கலை அதன் முதன்மையிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. பல்வேறு கட்டிடப்பாணிகளும், வளர்ச்சியடையத் தொடங்கியதுடன், கட்டிடக்கலை பற்றிய எழுத்தாக்கங்களும் உருவாகின. இவற்றிற் சில, கட்டிடங்கள் வடிவமைத்தல், கட்டுதல் தொடர்பில் பின்பற்றவேண்டிய விதிகளாக உருப்பெற்றன. இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், சீனாவிலெழுந்த பெங் சுயி போன்ற கீழைத் தேச நூல்களும், மேலை நாட்டிலெழுந்த விட்ருவியசின் நூலும் இதற்கு உதாரணங்களாகும். "கிளாசிக்கல்" மற்றும் மத்திய காலங்களில், ஐரோப்பாவில், கட்டிடக்கலைத் துறையில் தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை.

பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை


முதன்மைக் கட்டுரை: தொல்பழங்கால எகிப்தியக் கட்டிடக்கலை
கட்டிடக்கலையின் வரலாற்றில் பாரிய கட்டுமானங்களைக் கட்டிய மிகப் பழைய நாகரிகங்களுள் ஆப்பிரிக்காவின் நைல் ஆற்றங்கரையில் உருவாகிச் செழித்த எகிப்திய நாகரிகம் முதன்மையானது. இம் மக்கள் மிகப் பெரிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். பல வரலாற்றாளர்களும் உலகக் கட்டிடக்கலை வரலாற்றின் தொடக்கத்தை இங்கிருந்துதான் தொடங்குகிறார்கள். ஐரோப்பாவின் தொடக்ககால நாகரிகங்களான கிரேக்க, ரோமர்காலக் கட்டிடக்கலைகளுக்கான பல அடிப்படைகளை எகிப்தியக் கட்டிடக்கலையில் அடையாளம் காண முடியும்.

மெசொப்பொத்தேமியக் கட்டிடக்கலை

தற்கால ஈராக்கிலுள்ள யூபிரட்டீஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகளுக்கு இடையேயுள்ள பகுதியில் செழித்து வளர்ந்த நாகரிகம், உலகக் கட்டிடக்கலை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்த இன்னொரு தொன்மையான ஆசிய நாகரிகம் ஆகும்.

பண்டைய கிரேக்க கட்டிடக்கலை

பண்டைக் கிரேக்க நாகரிகம் கிமு 1900 தொடக்கம் கிமு 133 வரையான காலப்பகுதியில் செழித்திருந்தது. ஆனால் இதன் தாக்கம் இன்றுவரை மேற்கு நாட்டுப் பண்பாட்டில் உணரப்பட்டு வருகிறது. கிரேக்கர்கள் உலகக் கட்டிடக்கலைக்குப் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுள் முதன்மையானவை கோயில்கள் ஆகும். கிரேக்கக் கோயில்கள் எகிப்தியக் கோயில்களைவிடச் சிறியவை. இவை, ஆள்பவர்களின் அதிகாரத்தைக் காட்டுவதற்காகவோ, பெருமளவிலான மக்கள் குழுமி வழிபடுவதற்காகவோ கட்டப்படவில்லை. இவை முக்கியமாகப் புற அழகுக்காகவும், சூழலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களுக்குமாகவே வடிவமைக்கப்பட்டன.
கிரேக்கக் கட்டிடக்கலையில் ஒழுங்குகள் எனப்படும் மூன்று விதமான பாணிகள் பயன்படுத்தப்பட்டன. இவை டொரிக், அயனிக், கொறிந்தியன் என அழைக்கப்பட்டன. ஒழுங்குகள் என்பன தூண்களின் அமைப்பு, அவற்றின் அளவுவிகிதங்கள், அலங்காரங்கள், அவற்றால் தாங்கப்படும் வளைகளின் அமைப்பு அலங்காரம் முதலியவை தொடர்பானது.

பண்டைய ரோமக் கட்டிடக்கலை

ரோமர் காலம் கிமு முதலாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ரோமர்களின் கட்டிடக்கலை ஓரளவுக்குக் கிரேக்கக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியே எனினும் ரோமர் காலத்தில் கட்டிடக்கலையில் பெருமளவு வளர்ச்சிகள் ஏற்பட்டன. ரோமர் புத்தாக்கத் திறனும், கட்டிடப்பொருள்கள் பற்றிய நல்ல அறிவும் கொண்டிருந்தனர். இயற்கையாகக் கிடைத்த கற்கள் முதலியவற்றை வெட்டிக் கட்டிடக் கற்களை உருவாக்கும் முறைக்குப் பதிலாக சுண்ணாம்பு, மணல், சிறு கற்கள் போன்றவற்றை நீருடன் கலந்து ஒருவகைக் காங்கிறீட்டுச் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் ரோமர்களே.
கட்டிடக்கலை ஒழுங்குகளைப் பொறுத்தவரை ரோமர் மேலும் இரண்டு ஒழுங்குகளைப் பயன்படுத்தினர். இவை கூட்டு ஒழுங்கு, டஸ்கன் ஒழுங்கு என்பவையாகும்.

மறுமலர்ச்சிக்காலமும் கட்டிடக்கலைஞரும்

தாஜ் மஹால், ஆக்ரா, இந்தியா
"ரெனசான்ஸ்" என்று அழைக்கப்பட்ட, மறுமலர்ச்சிக் காலகட்டத் தொடக்கத்துடன், சமயத்தைவிட மனிதசமுதாயமும், தனிப்பட்டவர்களும், முதன்மை பெறத் தொடங்கியமையும், அக்காலத்திலேற்பட்ட முன்னேற்றமும், அதன் பெறுபேறுகளும், கட்டிடக்கலைத்துறையில் புதிய அத்தியாயமொன்றுக்கு அடிகோலின. கட்டிடக்கலை தொடர்பில், தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் பெருமைப்படுத்தப்பட்டனர். மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி, புரூணலெஸ்ச்சி போன்றவர்களை உதாரணமாகக் காட்டலாம். அக்காலத்தில், சிற்பி, கட்டிடக் கலைஞன், பொறியியலாளன் எனத் தொழிற்பிரிவுகள் இருக்கவில்லை. ஒரு சிற்பியே (சிற்பம் செய்பவன்) பாலமொன்றை வடிவமைத்துக் கட்டக்கூடிய நிலை இருந்தது. அதற்குத் தேவையான கணித அறிவும்கூடப் பொதுமை அறிவின் பாற்பட்டதாகவேயிருந்தது. இந்தியாவிலும், சிற்பக் கலைஞர்களே கட்டிடங்களையும் வடிவமைத்துக் கட்டினார்கள். கட்டிடக்கலை, பொறியியல் அனைத்தும் இச் சிற்பக் கலைக்கு உள்ளேயே அடங்கியிருந்தன.
கட்டிடம் சார்ந்த தேவைகளின் அதிகரிப்பு, அவை தொடர்பான பெருமளவு அறிவு வளர்ச்சி என்பவற்றோடு, புதிய கட்டிடப்பொருட்களின் அறிமுகம், தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பனவும் சேர்ந்து கட்டிடத்துறையினுள் பல்வேறு தொழிற்பிரிவுகள் உருவாக வழி சமைத்தன. கூடிய தொழில் நுட்ப அம்சங்களை எடுத்துக்கொண்டு பல்வேறு பொறியியற் துறைகள் பிரிந்துபோகக் கட்டிடக்கலை அழகியல் அம்சங்களையும், இடவெளி(space)வடிவமைப்புத் தொடர்பான பொறுப்புக்களையும் உள்ளடக்கி, வளர்ச்சியடைந்தது. "சீமான் கட்டிடக்கலைஞர்" என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் உருவாகினர். பொதுவாகப் பெரும் பணக்காரர்களை வாடிக்கையாளராகக் கொண்டிருந்த இவர்கள், தோற்றம் சார்ந்த அம்சங்களிலேயே கூடிய கவனம் செலுத்தினர். அதுவும் பெரும்பாலும், வரலாற்றுக் கட்டிட மாதிரிகளையே பின்பற்றிவந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலிருந்த இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts) என்னும் நிறுவனம், சூழ்நிலை சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடாது, அழகிய வரைபடங்களை உள்ளடக்கிய விரைவான திட்டங்களை உருவாக்குவதற்கே பயிற்சி கொடுத்துவந்தது.
கிறிஸ்லர் கட்டிடம், நியூ யோர்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
இதற்கிடையில், தொழிற் புரட்சி தொகையான நுகர்வுக்கான பாதையைத் திறந்துவிட்டதுடன், ஒருகாலத்தில் விலையுயர்ந்த கைவினைத்திறனோடு சம்பந்தப்பட்டிருந்த அலங்காரப் பொருட்கள், இயந்திர உற்பத்தியின் கீழ் மலிந்ததன் காரணமாக, அழகியல் மத்தியதர மக்கள் மட்டத்திலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியது. எனினும், உற்பத்தி வழிமுறைகளின் வெளிப்பாடுகளோடு இயைந்த நேர்மையும், அழகும் இவ்வுற்பத்திப் பொருட்களிற் குறைவாகவே காணப்பட்டன.

நவீனத்துவமும் கட்டிடக்கலையும்

இவ்வாறான ஒரு பொதுவான நிலைமையினால் உருவான திருப்தியின்மை, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல புதிய சிந்தனைப் பாதைகளுக்கு வித்திட்டது. கட்டிடக்கலையைப் பொறுத்தவரை இது நவீன கட்டிடக்கலைக்கு முன்னோடியாக அமைந்ததெனலாம். சிறந்த தரத்தையுடைய இயந்திர உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்வதற்காக உருவாக்கப்பட்ட டொய்ச் வேர்க்பண்ட் (Deutshe Werkbund) இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். கைத்தொழில் வடிவமைப்புத் துறை இங்கேதான் ஆரம்பமானதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 1919 ல், ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட பௌஹவுஸ் (Bauhaus) பாடசாலை வரலாற்றை நிராகரித்துவிட்டு, கட்டிடக்கலை என்பது கலை, கைவினை மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு தொகுப்பு என்ற கருத்தைக் கொண்டிருந்தது.
முதன்முதலில் நவீன கட்டிடக்கலை பயிலப்படத் தொடங்கியபோது, அது, தார்மீக, தத்துவ, அழகியல் அடிப்படைகளிலமைந்த, ஒரு avante garde இயக்கமாக இருந்தது. வரலாற்றை நிராகரித்து, வடிவத்தை உருவாக்கும் காரணியாகச் செயற்பாட்டை (function), கருதியதுமூலம் உண்மையைத் தேட முயற்சிக்கப்பட்டது. கட்டிடக்கலைஞர்கள் பிரபலமனார்கள். பின்னர், நவீன கட்டிடக்கலை, பொருளாதார நோக்கத்தையும், எளிமையையும் கருத்தில் கொண்டு, பெரும்படி உற்பத்திமுறையை நோக்கிச் சென்றது.
நவீனத்துவக் கட்டிடக்கலைஞர்கள், கட்டிடங்களை அவற்றின் அடிப்படையான வடிவங்களுக்கு எளிமையாக்க முயன்றனர். இவர்கள் கட்டிடங்களில் அலங்காரங்களை நீக்கிவிட்டனர். உருக்குத் தூண்கள், வளைகள், காங்கிறீற்று மேற்பரப்புக்கள் போன்ற தங்கள் உண்மையான அமைப்புக்களை வெளிப்படுத்தும் கட்டிடங்கள் அலங்காரங்கள் இன்றித் தம்மளவிலேயே அழகானவையாகக் கருதப்பட்டன. மீஸ் வான் டெர் ரோ போன்ற கட்டிடக்கலைஞர்கள், கட்டிடப்பொருட்கள், கட்டுமான நுட்பங்கள் என்பவற்றின் உள்ளார்ந்த அழகியல் இயல்புகளைப் பயன்படுத்திக் கட்டிடங்களை அழகாக்க முயன்றனர். இவர்கள் மரபுவழியான வரலாற்று வடிவங்களுக்குப் பதிலாக எளிமையான வடிவவியல் வடிவங்களை உருவாக்கினர்.
எனினும், நவீன கட்டிடக்கலையில் ஒரு தரக்குறைவு ஏற்பட்டிருப்பதை, 1960களிலிருந்து, பொதுமக்கள் உணர ஆரம்பித்தனர். கருத்தின்மை, வரட்சித்தனம், அழகின்மை, ஒருசீர்த்தன்மை மற்றும் உளவியற் தாக்கங்கள் என்பன இந்நிலைக்குக் காரணமாகக் காட்டப்பட்ட சில விடயங்களாகும்.
கட்டிடக்கலையில் இருக்கவேண்டிய ஆழத்தைத் தியாகம் செய்துவிட்டு, வெளித்தோற்ற அளவில் பொதுமக்களைக் கவரக்கூடிய கட்டிடங்களைக் கொடுக்கும் பாதையொன்றைக் கைக்கொள்வதுமூலம், மேற்கூறிய நிலைமைக்குப் பதிலளிக்கக் கட்டிடக்கலைத் துறை முயன்றது. இது பின்நவீனத்துவம் (Postmodernism) என அழைக்கப்பட்டது. உள்ளே செயல்பாடுகளுக்கு உகந்தபடியான வடிவமைப்பையும், வெளியில் அலங்கரிக்கப்பட்டதுமான கொட்டகை; உள்ளும், புறமும் ஒரே நேரத்தில் சிந்தித்து வடிவமைக்கமுயன்று, கவர்ச்சியற்ற கட்டிடத்தைக் கட்டுவதிலும் சிறந்தது என்ற தொனிகொண்ட, ராபர்ட் வெஞ்சூரி என்னும் கட்டிடக்கலைஞரது கருத்து, இந்த அணுகுமுறையின் நோக்கத்தை விளக்குகிறது.

கட்டிடக்கலை இன்று

Sydney Opera House, designed by Utzon. photo E.Lau.
கட்டிடக்கலைத் துறையின் இன்னொரு பகுதியினரும், கட்டிடக்கலைஞரல்லாதோர் சிலரும், பிரச்சினையின் அடிப்படை என்று அவர்கள் கருதிய விடயங்களுக்குத் தீர்வுகாண்பதன் மூலம் இப் பிரச்சினையை அணுக முயன்றனர். கட்டிடக்கலையென்பது, தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் தங்கள் விருப்பங்கள், தத்துவங்கள் அல்லது அழகியல் நோக்கங்களை அடைவதற்கான ஒன்றல்லவென்றும், மாறாக மக்களுடைய நாளாந்தத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தி , வாழ்வுக்குகந்த சூழலை வழங்குவதாக இருக்கவேண்டுமென அவர்கள் கருதினர். சிறந்த உற்பத்திகளை உருவாக்குவதற்கு வழிசமைக்கக் கூடிய, புதிய வடிவமைப்பு வழிமுறையைக் கண்டுபிடிக்கும் நோக்கில், கிறிஸ் ஜோன்ஸ், கிறிஸ்தோபர் அலெக்ஸாண்டர் போன்றவர்களைக் கொண்ட வடிவமைப்பு வழிமுறைகள் இயக்கம் (Design Methodology Movement) ஆரம்பிக்கப்பட்டது. நடத்தை, சூழல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த விடயங்களில் விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, வடிவமைப்பு வழிமுறைகளுக்கு உதவக்கூடிய தகவல்கள் பெறப்பட்டன.
மேலும் பல பிரச்சினைகள் அடையாளம் காணப்படத் தொடங்கியபோது, கட்டிடச் சேவைகள் போன்ற அம்சங்கள் தொடர்பில், கட்டிடங்களின் சிக்கல்தன்மை அதிகரித்து, கட்டிடக்கலை, எப்பொழுதுமில்லாதபடி பல்துறைசார்ந்த ஒன்றாக ஆனது. இதனால், கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்களின் உருவாக்கத்துக்கு, பல உயர்தொழில் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் இக்குழுவுக்குக் கட்டிடக் கலைஞரே தலைவராக விளங்கினார். தற்காலத்தில் இத் தலைமைப் பொறுப்புக்கும், பல சிறப்புப் பயிற்சிகள் தேவைப்பட்ட காரணத்தினால், திட்ட முகாமைத்துவம் போன்ற புதிய துறைகள் தோன்றிக் கட்டிடக்கலைத் துறையின் தலைமை நிலையையும் பிடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. எனினும், கட்டிடங்களின் வடிவமைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, கட்டிடக்கலைத்துறை இன்னும் பலமாகவேயிருந்து வருகின்றது. விசேடமாக, பண்பாட்டுச் சின்னங்களாகக் கருதப்படக்கூடிய கட்டிடவகைகளில், கட்டிடக்கலைப் பாணி சார்ந்த பரிசோதனைகள் இன்னும் நிகழக்கூடிய நிலையுள்ளதுடன் அவை மேற்படி பரிசோதனைகளின் காட்சியகங்களாகவும் விளங்குகின்றன.
மனித இனத்தின் உற்பத்திகளிலே, எக்காலத்திலும், மிகக் கூடிய அளவு பார்வைக்குத் தெரிகின்றவை கட்டிடங்களேயாகும். இருந்தும், அவற்றுட் பெரும்பாலானவை, சாதாரண மக்களினாலேயோ அல்லது வளரும் நாடுகளிலுள்ளதுபோல், கொத்தனார்களாலேயோ கட்டப்படுகின்றன. வளர்ந்த நாடுகளிலே தரப்படுத்தப்பட்ட (standardised) உற்பத்திமுறைகள் மூலம் பெருமளவு கட்டிடங்கள் உருவாகின்றன. கட்டிட உற்பத்தியின் மிகக் குறைவான வீதமே கட்டிடக்கலைஞரின் ஈடுபாட்டைக் கொண்டுள்ளன. சிக்கலான கட்டிட வகைகளிலும், பண்பாட்டு, மற்றும் அரசியற் சின்னங்களாக விளங்கக்கூடிய கட்டிடங்களில் மட்டுமே கட்டிடக்கலைஞரின் திறமை பெரும்பாலும் வேண்டப்படுகின்றது. இவற்றைத்தான் பொதுமக்களும், கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்களாகக் கருதுகிறார்கள். சமூகத்துக்கும், கட்டிடக்கலைஞருக்குமிடையே எப்பொழுதும் ஒரு கருத்துப்பரிமாற்றம் நடந்துகொண்டுதான் வருகிறது. இப் பரிமாற்றத்தின் விளைவுகள்தான் கட்டிடக்கலையும், அதன் உற்பத்திப்பொருட்களுமாகும் என்று சொல்லலாம்.

by
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம்

 
டீ கோப்பை
பால் விடாமலோ குறைவாக பால் விட்டோ டீ குடிப்பதில் கூடுதல் நன்மை இருக்கலாம் என்று தெரிகிறது

அடிக்கடி டீ காஃபி குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்று குறிப்புணர்த்தும் புதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேரை பதிமூன்று ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கன் ஹார்ட் அஸ்ஸொஸியேஷன் என்ற அமைப்பின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.
டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறு தடவை டீ அருந்துபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நன்மை ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் டீ குடிப்பவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு நன்மை காஃபியில் இல்லை.
ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு கோப்பைகள் டீ அருந்துபவர்களுக்கு அதனை விட குறைவாக டீ அருந்துபவர்களைக் காட்டிலும் இருதய நோய் வருவதற்கான ஆபத்து இருபது சதவீதம் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
ஆனால் குடிக்கும் டீயின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால், ஆபத்தின் அளவு மென்மேலும் குறைகிறது என்றில்லை. ஒரு கட்டத்தில் இந்தப் பலன் நின்று போய்விடுகிறது.
நெதர்லாந்தில் மக்கள் டீ குடிக்கும்போது அதில் சில துளிகள்தான் பால் விடுவார்கள், ஆனால் இந்தியர்கள் இலங்கையர்கள் எல்லாம் மொத்தமாக பாலிலோ அல்லது தண்ணீருக்கு சமமான பாலிலோ டீ அருந்துபவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த அளவுக்கு பால் விட்டு டீ குடிக்கும்போது இப்படியான மருத்துவ பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
டீயில் இருக்கும் ப்லவனாய்ட்ஸ் என்ற வஸ்துதான் இருதயக் கோளாறு ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று சொல்லப்படுகிறது.
டீயில் பால் சேர்க்கும்போது பலன் கிடைக்காமல் போய்விடுகிறதா என்பதை இனிமேல்தான் ஆராய்ச்சிகள் உறுதிசெய்ய வேண்டும். 

News by
B B C Tamil.com